திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ‘அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்’ செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இடநெருக்கடி காரணமாக திருத்தணி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. கடந்த 26-2-2026 அன்று இந்த புதிய பேருந்து நிலையம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், திடீரென திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது.
இதன் பின்னணியில், புதிய பேருந்து நிலையத்துக்கு ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம்’ என பெயர் வைக்கப்பட்டதற்கு ‘அறிஞர் அண்ணா நெசவாளர்கள் முன்னேற்ற சங்கம்’ கடும் எதிர்ப்பு தெரிவித்துவருவதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து நெசவாளர் சங்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் கலாம் விஜயனிடம் பேசியபோது, ``26-2-2025 வரை புதிய பேருந்து நிலையத்துக்கு எந்தவித பெயரும் வைக்கப்படாத நிலையில், திடீரென இரவோடு இரவாக ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம்’ என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்? யாருடைய உத்தரவின்பேரில் அறிஞர் அண்ணாவின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்ற தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காக அறிஞர் அண்ணாவுக்கு அவமதிப்பு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் கொதிப்பாக.
அண்ணா பெயரைக் கட்சிப் பெயராகக் கொண்டிருக்கும் அ.தி.மு.க., இவ்விவகாரத்தில் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்துவருவதும் விவாதமாகியிருக்கிறது. இதுகுறித்து அ.தி.மு.க நகர செயலாளர் சௌந்தரராஜன் மற்றும் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா ஆகியோரிடம் கேட்டபோது, “ஏற்கெனவே திருத்தணியில் காமராஜர் பெயரில் செயல்பட்டுவந்த காய்கறி மார்க்கெட்டுக்கு, கருணாநிதியின் பெயரை சூட்டினார்கள். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் மீண்டும் காமராஜர் பெயரையே வைத்தார்கள்.
தற்போதும் பழைய பேருந்து நிலையத்துக்கு வைக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் பெயரையே புதிய பேருந்து நிலையத்துக்கும் வைக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும் ஆளுங்கட்சியாக இருப்பதால், அவர்கள் பிடிவாதமாக கருணாநிதி பெயரை வைத்திருக்கிறார்கள். அண்ணாவின் பெயரை வைக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கவிருப்பதோடு, விரைவில் அ.தி.மு.க சார்பில் போராட்டமும் நடத்தப்படும்” என்றனர்.
அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ரமணா
இந்தப் பெயர் சர்ச்சை குறித்து திருத்தணி நகராட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, “திருத்தணி நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் 18 தி.மு.க கவுன்சிலர்களும் இரண்டு அ.தி.மு.க கவுன்சிலர்களும் ஒரு சுயேச்சை கவுன்சிலரும் உள்ளனர்.அதனால் நகராட்சியில் தி.மு.க-வின் கை ஓங்கி உள்ளது. மேலும் தி.மு.கவைச் சேர்ந்த சரஸ்வதி பூபதி தலைவராக இருந்தாலும் அவரின் கணவர் பூபதிதான் நகராட்சி நிர்வாகத்தில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க-வில் இரண்டு கவுன்சிலர்கள் மட்டுமே இருப்பதால், அவர்களும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆளுங்கட்சியினருக்கு ஆமாம் சாமி போட்டு வருகிறார்கள்” என்று போட்டுடைத்தனர்.
இதுகுறித்து பூபதியிடம் விளக்கம் கேட்டதற்கு, ``நகராட்சி நிர்வாகத்தில் நான் தலையிடுவதில்லை. இந்த விவகாரத்தில், பழைய பேருந்து நிலையமான அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் வழக்கம் போல செயல்படும். புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை அரசாணை பிறப்பித்து சூட்டியிருக்கிறார்கள். இதில் என்ன தவறு? அரசியல் லாபத்துக்காக சிலர் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள்” என்றார்.
“டைப்பிங் மிஸ்டேக்...”
- நா.த.க-வின் ‘அடடே’ விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருத்தணி பேருந்து நிலைய பெயர் சர்ச்சை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘திருத்தணி பேருந்து நிலையத்துக்கு மா.பொ.சிவஞானம் பெயரை மாற்றி, கருணாநிதி பெயரா?’ என கொந்தளித்திருப்பது இவ்விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, ‘எல்லை காத்த மாவீரர் ம.பொ.சிவஞானம் அவர்களின் பெயரில் திருத்தணி நகரில் அமைந்திருந்த பேருந்து நிலையத்தின் பெயரை, கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று மாற்ற முயல்வது எதேச்சதிகாரத்தின் உச்சம். தி.மு.க அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்’ என்றெல்லாம் எச்சரித்துள்ளது.
பூபதி
இந்தப் பெயர் குழப்பம் குறித்து நா.த.க தலைமை நிலையச் செயலாளர் செந்திலிடம் விளக்கம் கேட்டபோது, ``கட்சித் தலைமை வெளியிட்ட அறிக்கையில் டைப்பிங் மிஸ்டேக்காக(?!) ‘மா.பொ.சி பேருந்து நிலையம்’ என அச்சடித்து விட்டார்கள். அதே நேரத்தில் கருணாநிதி பெயரை பேருந்து நிலையத்துக்கு வைப்பது ஏற்புடையதல்ல. திருத்தணியை மீட்டெடுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மா.பொ.சி-யின் பெயரை புதிய பேருந்து நிலையத்துக்கு சூட்ட வேண்டும்” என்றார்.