விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம்: சங்கீதாவுக்கு செட்டில்மென்ட் தர விஜய் சம்மதம்? தேர்தல் வருவதால் தீவிரமாகும் சமாதான பேச்சு?
Seithipunal Tamil March 05, 2026 05:48 AM

தமிழக அரசியலும் தமிழ் சினிமாவும் கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய விவகாரமாக நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய்யின் குடும்ப பிரச்சனை மாறியுள்ளது. அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் விவாகரத்து மனு கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மற்றும் சங்கீதா கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். லண்டனை சேர்ந்த தொழிலதிபரின் மகளான சங்கீதா, விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த மனுவில் பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக திரைத்துறையைச் சேர்ந்த ஒரு நடிகையுடன் விஜய்க்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகார்கள் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக சங்கீதா தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அந்த நடிகையுடன் விஜய் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததாகவும், பொதுநிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டதாகவும் சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படங்கள் குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, சமீபகாலமாக சங்கீதாவிற்கு பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் இந்த விவகாரம் விஜய்யின் அரசியல் பயணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. சமீபத்தில் அரசியலுக்குள் நுழைந்து கட்சியை உருவாக்கியுள்ள விஜய்யின் அரசியல் பிம்பத்திற்கு இந்த விவகாரம் சவாலாக மாறக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் சமரச முயற்சியாக விஜய் தனது மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகளுக்காக சுமார் 250 கோடி ரூபாய் ஜீவனாம்சம் வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பத்திற்குள் நிலவும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்கவும், விவாகரத்து மனுவை திரும்பப் பெறவும் இந்த தொகையை வழங்க அவர் சம்மதித்ததாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆனால் இந்த சமரச முயற்சிக்கு சங்கீதா தரப்பு ஒப்புக்கொள்வார்களா என்பது இன்னும் தெளிவாக இல்லை. ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணையின் போது இருவரும் நேரில் ஆஜராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த நாளில் சமரசம் ஏற்படுமா அல்லது சட்டப் போராட்டம் தொடருமா என்பது குறித்து தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.