அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியும், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான புகழேந்தி, தற்போது ‘புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ (புஅதிமுக) என்ற புதிய கட்சியைத் தொடங்கி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் சமீபத்தில் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவருடன் இருந்த முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவராகத் தனித்தனிப் பாதையைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். ஏற்கனவே ஓ.பி.எஸ் அணியில் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் ‘எம்.ஜி.ஆர் அண்ணா திமுக’ என்ற கட்சியைத் தொடங்கிய நிலையில், இப்போது புகழேந்தியும் தனது புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
மற்றொரு பக்கம், சசிகலா அவர்கள் தனது கட்சியின் பெயரை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அதற்கான தனிக்கொடியை மட்டும் அறிமுகப்படுத்தி அரசியல் களத்தில் தனது இருப்பைப் பதிவு செய்திருந்தார். ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்த பிறகு, அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்கள் ஆளாளுக்கு ஒரு கட்சியைத் தொடங்கி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதிமுகவின் பல்வேறு பிரிவினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.