தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு பிறகு, கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை தன் பக்கம் இழுக்க விஜய் தரப்பு மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காதது, 'இலவு காத்த கிளியாக' ஏமாந்த கதையாக மாறியுள்ளது. திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தனது உறுதியை தக்கவைத்து கொண்டுள்ளது.
தற்போதைய சூழலில், காங்கிரஸ் இல்லாத நிலையில் விஜய்யின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனித்து போட்டியா அல்லது சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணியா? என்பதே தவெக முன் உள்ள சவால்கள். ராகுல் காந்தியுடன் இணக்கமான உறவை பேண முயன்ற விஜய்க்கு, தற்போதைய கள நிலவரம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
சமூக வலைதளங்களில் விஜய்யின் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்டாலும், களப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. திராவிட மற்றும் தேசியக்கட்சிகளுக்கு மாற்றாக தன்னை காட்டிக்கொள்ள முயலும் விஜய், தனது அடுத்தகட்ட வியூகத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் அமைக்க திட்டமிட்டு வருகிறார்.
என்னதான் அரசியல்வாதிகள் கூட்டணி அமைத்தாலும் ஓட்டு போட போவது மக்கள் தான்.. கூட்டணிக்கு ஓட்டு போடுவார்களா? அல்லது மாற்றத்திற்கு ஓட்டு போடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva