நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ள விவகாரம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவர் மனுவில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்ததாகவும், இதனால் தாம் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை மனரீதியாக துன்புறுத்தினார், சுதந்திரமாக இயங்க முடியாத சூழல் ஏற்பட்டது, பொருளாதார ரீதியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோலிவுட்டில் வெற்றிகரமான ஜோடியாக பார்க்கப்பட்ட விஜய் – சங்கீதா தம்பதியருக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் உள்ளதாக தகவல்கள் வந்தாலும், இருவரும் இதுகுறித்து வெளிப்படையாக எதுவும் பேசாமல் இருந்தனர். இந்நிலையில் திடீரென விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பேசப்படுகிறது. குறிப்பாக அரசியலில் விஜய்யை எதிர்க்கும் தரப்பினர் சமூக வலைதளங்களில் இதை வைத்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிப்பவர்கள் சங்கீதாவை விமர்சிக்கும் வகையிலும் பதிவுகள் வெளியிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சில சமூக வலைதள கணக்குகள் சங்கீதாவை தரக்குறைவாக விமர்சிப்பதுடன், சில செய்தி நிறுவனங்களின் லோகோக்களை பயன்படுத்தி போலி செய்திகளையும் பரப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விஜய் இதுவரை எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதியாக இருப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக தனது மனைவியை விமர்சிப்பதை தடுக்க குறைந்தபட்சம் ஒரு அறிக்கை வெளியிட வேண்டாமா என்ற கேள்வியும் எழுகிறது. பெண்கள் அமைப்புகளும் இந்த மௌனத்தை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளன.
இந்த சூழலில் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் முன்னர் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் சங்கீதா குறித்து அவர் மிகுந்த பாராட்டுக்களுடன் பேசியிருந்தார்.
அதில், “சங்கீதா எனக்கு மருமகள் மட்டுமல்ல; என் சிறந்த நண்பர். குழந்தைகள்மீது மிகவும் பாசம் கொண்டவர். வீட்டில் உதவியாளர்கள் இருந்தாலும் குழந்தைகள் கேட்டதை தன் கையாலேயே செய்து கொடுப்பார். குழந்தைகளுக்காக மிகவும் அக்கறையுடன் இருப்பவர். அவர்களுக்கு நல்ல தாயாக இருக்கிறார்,” என்று ஷோபா கூறியிருந்தார்.