'விசுவாசத்துக்கு ஓபிஎஸ் என்றால், துரோகத்துக்கு அடையாளம் பழனிசாமி'; முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!
Seithipunal Tamil March 08, 2026 04:48 AM

மதுரை திருமங்கலம் ராயபாளையத்தில் இன்று சனிக்கிழமை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளர், அமைச்சர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில், கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:

இந்த மேடை மிக வித்தியாசமான மேடை. சில காலத்துக்கு முன்பு வரை நமது ஓபிஎஸ், இந்த மேடையில் இருப்பார் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் லேட்டாக இருந்தாலும் எம்ஜிஆர் இருந்த தாய்க்கழகமான திமுகவுக்குத்தான் திரும்பி வந்துள்ளார். அவருடன் வந்துள்ள உடன்பிறப்புகளையும் திமுக தலைமை தொண்டனாக மனமுவந்து வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், நீங்கள் மட்டுமல்ல எம்ஜிஆருக்கு நானும் ரசிகன்தான். கழகம் எம்ஜிஆரை வளர்த்தது அவரும் கழகத்தை வளர்த்தார். கருணாநிதியை தலைவராகவும் அவர் ஏற்றுக்கொண்டார். அப்படிப்பட்ட தாய்க் கழகத்துக்கு தாய் மடிக்கு நீங்கள் எல்லாம் திரும்பியிருக்கிறீர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்ணாவையும், அவர் பெயரிலுள்ள அதிமுவையும், அவரது கொள்கைளையும் மறந்து துரோகத்தின் முழு உருவமாக அதிமுக மாறியுள்ளதால் அண்ணா தொடங்கிய இயக்கத்துக்கு நீங்கள் வந்துள்ளீர்கள். சுயமரியாதை கோட்டையான அண்ணா அறிவலாயத்துக்கு வந்துள்ளீர்கள் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசியுள்ளார்.

யார் என்ன சொன்னாலும் தனது பண்பை மாற்றிக்கொள்ளாதவர் ஓபிஎஸ். அமைதியோடும், அன்போடும் அதே சிரித்த முகத்தோடு இன்றைக்கும் அவர் இருக்கிறார். அமைதி, புன்னகை மட்டுமல்ல ஓபிஎஸ் என்று சொன்னால் ஞாபகத்துக்கு வரக்கூடிய ஒரே சொல் விசுவாசம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், விசுவாசத்துக்கு ஓபிஎஸ் என்றால், துரோகத்துக்கு அடையாளமாக இருப்பவர் பழனிசாமி என்று குறிப்பிட்டுள்ளதோடு, கூவத்தூரில் சசிகலா காலில் ஊர்ந்து தவழ்ந்து போய் முதலமைச்சராகியதாகவும், அதே அம்மையாரை நோக்கி நீ எனக்கு பதவி வாங்கித் தந்தாயா என ஒருமையில் கேட்டவர் பழனிசாமி என்று விமர்சித்துள்ளார்.

அவர் என்னவெல்லாம் சொல்லியிருப்பார் என்று ஒபிஎஸ்ஸுக்கு நன்றாக தெரியும். பழனிசாமியை பொறுத்தவரைக்கும் தன்னை காப்பாற்றிக்கொள்ள எதுவேண்டுமானாலும் செய்வார். அதன் உச்சகட்ட துரோகம் என்ன தெரியுமா, தன்னைக் காப்பற்றிக்கொள்ள எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை இன்று அடமானம் வைத்துள்ளார் பழனிசாமி என்று கடுமையாக சாடியுள்ளார்.

அவர் (பழனிசாமி) என்ன நினைக்கிறார் என்றால் பாஜக தனக்கு நல்லது செய்யும் என நினைக்கிறார். ஆனால் பாஜக உண்மையில் யாருக்கும் நல்லது செய்யாது என்று தெரிவித்துள்ளார்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.