'சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்ற வாக்குறுதி; கடந்த 05 ஆண்டுகளில் இதுவரை திமுக அரசு நிறைவேற்றவில்லை'; சுட்டிக்காட்டிய அண்ணாமலை..!
Seithipunal Tamil March 08, 2026 06:48 AM

கடந்த தேர்தலில் திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 503-இல், சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் அதனை நிறைவேற்றவில்லை என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

'நாடு முழுவதும், கடந்த 10 ஆண்டுகளில், சமையல் எரிவாயு பயன்பாடு, 45% அதிகரித்துள்ளது. பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்த உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களால், கடந்த 10 ஆண்டுகளில், சமையல் எரிவாயு இணைப்பு, 14 கோடி வீடுகளில் இருந்து, சுமார் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து, 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் இன்று சமையல் எரிவாயு இணைப்பு உள்ளது.

பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, சமையல் எரிவாயு இறக்குமதியும் அதிகரித்திருக்கிறது. மொத்த பயன்பாட்டில், இறக்குமதி மட்டுமே 60% ஆக உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்படும்போது, நமது நாட்டிலும் விலை உயர்வு தவிர்க்கவியலாமல் போகிறது.

திமுக தனது கடந்த 2021 தேர்தல் வாக்குறுதி எண் 503ல், சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தது.

ஆனால், ஐந்து ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் அதனை நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக, தற்போதாவது, சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.' எனத் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.