கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பது, தென் மாவட்டங்களில் சாதி வெறியை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது, வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவது என்ற உத்தரவை திரும்ப பெறுவது, தமிழ்நாடு அரசு பள்ளிகளில் சாதி, மதத்தை மையமாக கொண்டு நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதை வரவேற்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கு.ராம கிருட்டினன், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு பரப்புரை மேற்கொள்வோம் என தெரிவித்தார். மேலும் தெருமுனை கூட்டங்கள் நடத்தி கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வோம் எனவும், பாஜக தமிழகத்திற்கு செய்த துரோகங்களை துண்டு பிரசுரமாக வீடு வீடாக சென்று சேர்க்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோல் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக மாறினால் தாங்கள் கொள்கையிலிருந்து மாறும் சூழல் உருவாகும் என்றும் கொள்கையிலிருந்து மாறக்கூடாது என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதை தொடர்ந்து தங்கள் அமைப்பு தவிர்த்து வருவதாகவும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் தெரிவித்தார்.