திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் தவாக தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பாஜவுடன், தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வருகிறதே? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு வேல்முருகன் பதிலளித்துள்ளதாவது: விஜய் எந்த மதவாதத்திற்கு எதிராக கட்சி தொடங்கினாரோ? அதே கட்சியுடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டு மக்கள் அவரை நிராகரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், கருத்து சொல்லக்கூடிய அளவுக்கு தவெக தேர்தல் வாக்குறுதிகள் வொர்த் இல்லை என்றும், விஜய் ஆந்திரா, தமிழ்நாடு ஏனைய மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநில முதலமைச்சர்கள், கட்சி தலைவர்கள் கொடுத்த தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி வெளியிடுகிறார் என்று விமர்சித்துள்ளார்.

மேலும், அவர் (விஜய்) சொல்லக்கூடிய திட்டங்கள் ஆண்டு ஆண்டு காலமாக இந்த மண்ணில் நடந்தேறி வருகின்ற திட்டங்கள். இந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறதா? இல்லையா? என்ற அடிப்படை புரிதல்கூட அவருக்கு இல்லாததைதான் இது காட்டுகிறது என்று பேசியுள்ளார்.
அத்துடன், பல மாநிலங்களை தனதாக்கி கொள்வது, முதலமைச்சர்களை தனதாக்கி கொள்வது, சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை பயன்படுத்தி மிரட்டுவது, அடிபணியாதவர்களை சிறையில் அடைப்பது, பொய் வழக்கு போடுவதுதான் பாரதிய ஜனதா என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மதத்தின் பெயரால் மக்களை அணி திரட்டுகின்ற முயற்சியில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள் என்றும், திமுக இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது. ஆனால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள்தான் நடிகர் விஜயின் வாக்குறுதிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இன்று ஒரு பவுன் ஒன்றரை லட்சம் ரூபாய். எப்படி ஒவ்வொரு திருமணமாகும் மணமகளுக்கும் கொடுக்க முடியும். சாத்தியமே இல்லை. அதேபோல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் எப்படி அரை பவுன் தங்கம் கொடுக்க முடியும்? இதெல்லாம் காதில் பூ சுற்றுகிற வேலை என்று தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.