தவெக தலைவர் விஜய், கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், உட்பட 41 பேர் பலியாகினர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் தற்போது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் விசாரணைக்காக டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ கடந்த ஜனவரி 06-ஆம் தேதி சம்மன் அனுப்பியது.

அதன்படி சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜரான விஜய்யிடம் சுமார் 06 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் கூட்டத்துக்கு தாமதமாக வந்தது ஏன்..? பாதுகாப்பு ஏற்பாடுகளில் என்ன குளறுபடிகள் நடந்தது..? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் நாளை (மார்ச் 10) டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த இருமுறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 03-வது முறையாக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், நாளை, 10-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி கோரியும் விஜய் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை சிபிஐ பரிசீலனை செய்ததாகவும், இதனையடுத்து அவர் நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து விஜய்க்கு புதிய சம்மன் அனுப்பப்படும் எனவும் சிபிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் அந்த விசாரணை டெல்லி அலுவலகத்தில் தான் நடைபெறும் என்றும், வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் தற்போது இல்லை எனவும் சிபிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.