அணு ஆயுத போட்டி காரணமாக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, ஈரானின் நிபுணர்கள் சபை அவரது 56 வயது மகனான மொஜ்தபா கமேனியை புதிய உச்ச தலைவராக நியமித்தது.
இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், அவரது காயங்களின் தீவிரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த சூழலில் இந்தப் போரை ஈரானிய ஊடகங்கள் 'ரமலான் போர்' எனக் குறிப்பிடுவதாகவும், 'ஜன்பாஸ்' என மொஜ்தபா கமேனியை அழைப்பதாகவும் 'டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல் ஈரானின் அடிப்படை அமைப்பை மொத்தமாக முடக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. கடந்த 28-ஆம் தேதி காலை தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேலிய வான்வெளி தாக்குதல்களில், கமேனியுடன் சேர்ந்து, அவரது மனைவி, மகள், மருமகன், மருமகள் மற்றும் குறைந்தது ஒரு பேரக்குழந்தை உட்பட பல குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமேனியின் அவரது மகன் (மொஜ்தபா கமேனி) குறிவைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையிலேயே அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக அவர் உச்சத் தலைவர் என அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை என்பதால் காயமடைந்திருக்கலாம் என சந்தேகம் வலுக்கிறது.