வறுமையும், அறியாமையும் ஒருவரது முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது ஒரு ஏழைக் குடும்பம். தந்தை 5-ஆம் வகுப்பு, தாய் 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், செங்கல் சூளையில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து தனது 22 வயது மகனை ஐஏஎஸ் அதிகாரியாக்கி அழகு பார்த்துள்ளனர். மகனின் விடாமுயற்சியும், அந்தத் தாயின் அசாத்தியமான வைராக்கியமுமே இந்த இமாலய வெற்றிக்குக் காரணம். “என் மகன் ஒரு வெற்றியாளனாக வர வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு வருடங்கள் நான் தவம் இருந்தேன்” என அந்தத் தாய் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தனது மகனின் கவனத்தை யாரும் சிதறடிக்கக் கூடாது என்பதிலும், அவனை யாரும் மட்டமாகப் பேசிவிடக் கூடாது என்பதிலும் அந்தத் தாய் மிக உறுதியாக இருந்துள்ளார். இதற்காக அவர் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது சொந்த உடன்பிறப்புகளின் (தம்பிகள், அக்கா-தங்கை) மொபைல் எண்களைக் கூட இரண்டு வருடங்களாக அவர் ‘பிளாக்’ செய்து வைத்துள்ளார். குடும்ப விசேஷங்கள், பேச்சுக்கள் மகனின் படிப்பைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக அவர் எடுத்த இந்த அதிரடி முடிவு இன்று ஒரு கலெக்டரை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.