அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலால் உலக சந்தையில் ஏற்பட்ட பதற்றம் தங்கம் விலையிலும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 1-ந்தேதி தங்கம் விலை திடீரென உயர்ந்த நிலையில், அதன் பின்னர் சில நாட்கள் தொடர்ந்து ஏற்றத்தாழ்வுடன் நகர்ந்தது.

கடந்த 7-ந்தேதி தங்கம் விலை திடீரென உயர்ந்து, ஒரு பவுனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.1,20,400-க்கு சென்றது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து ரூ.15,050-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பின்னர் 9-ந்தேதி விலை சரிவடைந்து, பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கும், கிராமுக்கு ரூ.14,950-க்கும் குறைந்தது. அதன் பிறகு நேற்று மீண்டும் விலை உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.1,20,400-க்கும், ஒரு கிராம் ரூ.15,050-க்கும் விற்பனையாகியது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1,20,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.15,120-க்கு விற்கப்படுகிறது.வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.