திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாகவே சென்று கொண்டிருக்கிறது. விசிகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்கனவே முரண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றன.
இப்போது அந்தப் பட்டியலில் மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. 'போட்டியிட்டால் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம்' என அறிவாலயத்திலேயே கறாராக பேசியிருக்கிறார் மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம்.
திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை மநீம இன்று நடத்தியிருந்தது. சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் தாங்கள் தனிச்சின்னத்தில் போட்டியிடவே விரும்புவதாக மநீம கூறியிருக்கிறது. மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் பேசுகையில், 'தொகுதி எண்ணிக்கையில் பிரச்னை இல்லை. அது சம்பந்தமான பேச்சுவார்த்தை சுமுகமாகவே சென்றது. ஆனால், திமுக எங்களை உதய சூரியன் சின்னத்தில் நிற்க கோரிக்கை வைக்கிறது.
ஸ்டாலின் - கமல்
கடந்த தேர்தல்களில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டு சராசரியாக 4% வாக்குகளை வாங்கியிருக்கிறோம். தொண்டர்கள் மற்றும் மக்களிடன் சென்று சேர்ந்த சின்னம் டார்ச் லைட் சின்னம். அதில் போட்டியிட வேண்டும் என்றே உறுதியாக இருக்கிறோம். சின்னம் குறித்துதான் இருதரப்புக்கும் மாற்று கருத்துகள் இருக்கிறது. தலைவரிடம் விஷயத்தை கூறுவோம். செயற்குழு கூடி முடிவெடுப்போம். இன்னும் ஓரிரு நாளில் மீண்டும் சந்திக்கிறோம்' என்றார்.
திமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படவிருப்பதாக தகவல் சொல்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.