நடிகை ரஞ்சனா நாச்சியார் தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகி, இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
முன்னதாக பாஜகவில் மாநில செயலராக இருந்த இவர், மும்மொழி கொள்கை விவகாரத்தில் முரண்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி விஜய்யின் தவெகவில் இணைந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக தவெக தலைமை மற்றும் நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வந்த அவர், தற்போது அக்கட்சியை விட்டு வெளியேறி திமுகவில் தஞ்சமடைந்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் கே.என். நேரு ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சனா, திராவிட இயக்கத்தில் இணைந்ததை பெருமையாக கருதுவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒரே இயக்கம் திமுக மட்டுமே என்றும் புகழாரம் சூட்டினார்.
தவெகவின் முக்கிய நிர்வாகியாக பார்க்கப்பட்ட ரஞ்சனாவின் இந்த திடீர் மாற்றம், அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், விஜய்யின் அரசியல் கூடாரம் காலியாகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இது தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva