அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் எம்பி பிரத்யூத் போர்டோலோய், கடந்த செவ்வாய்க்கிழமையன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து மறுநாள் புதன்கிழமையன்று அவர் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
அதனை தொடர்ந்து அடுத்த நாள் வியாழக்கிழமையன்று பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதில், 88 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் ஒரு நாளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த போர்டோலோய்க்கு திஸ்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், போர்டோலோயின் மகன் பிரதீக் காங்கிரஸ் கட்சி சார்பில் மார்கரிடா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், தனது தந்தை பாஜகவில் இணைந்த நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
தாம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டால் வாக்காளர்கள் குழப்பம் அடைவார்கள் என்றும், தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்காக செயல்படுவேன் என்றும் பிரதீக் கூறியுள்ளார். அப்பா பாஜகவில் போட்டி இடுவதும், மகன் காங்கிரசில் தொடர்ந்து செயல்படுவதும் அசாமில் பேசும் பொருளாகியுள்ளது.