உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொண்ட ஒரு 25 வயது இளைஞனின் கதை, இப்போது இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. படிக்கட்டுகளில் இருந்து நிலைதடுமாறி விழுந்த ஒரு பெண்ணை, சரியான நேரத்தில் அங்கிருந்த வாலிபர் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றியுள்ளார். அந்த இளைஞர் மட்டும் அங்கே இல்லையென்றால், அந்தப் பெண்ணுக்கு மிக மோசமான உயிராபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்பது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. ஆனால், காப்பாற்றிய அந்த இளைஞருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்குப் பதிலாக, அந்தப் பெண் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தன்னைத் தாங்கிப் பிடித்தபோது காயம் ஏற்பட்டதாகக் கூறி, சுமார் 2.50 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்) இழப்பீடு கேட்டு அந்தப் பெண் வழக்குத் தொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “காசுக்காக மனுஷன் இப்படியா இறங்குவான்?” எனப் பலரும் அந்தப் பெண்ணைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒருவருக்கு ஆபத்து எனத் தெரிந்தும் உதவி செய்ய முன்வருபவர்களுக்கு இது போன்ற சங்கடங்கள் ஏற்பட்டால், இனி யாராவது மற்றவர்களுக்கு உதவ முன்வருவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மனிதாபிமானத்தை விடப் பணமே முக்கியம் என நினைக்கும் சிலரின் இத்தகைய போக்கு, சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.