வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறஉள்ளது. வாக்கு எண்னிக்கை மே மாதம் 04 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்தத் தேர்தலில், திமுக கூட்டணி, அதிமுக -பாஜக கூட்டணி காட்சிகள் தவெக மற்றும் நாதக தனித்துப் போட்டி என களம் இருந்து வருகிறது. இதனால் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.
இதில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் கையெழுத்து என நடந்து வருகின்றது. மறுபக்கம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிமுக – பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் தேர்தல் தேதி அறிவித்த பிறகும் கூட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தமிழ்நாடு வருவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. நாளை மறுநாள் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றார்.
அங்கு அவர், மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், பாமக தலைவர் அன்புமணி ஆகிய இருவரும் அடுத்து டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.