சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் செய்வது தொடர்பாக ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
வேட்பாளர்கள் அந்தந்த மாவட்ட ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடமும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மாநில குழுவிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.
ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன் அனுமதி பெறாமல் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் கட்டணச் செய்தி மற்றும் விளம்பரங்களை பதிவிடக் கூடாது.
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்ட விளம்பரங்கள் மற்றும் கட்டணச் செய்திகளுக்கான செலவின விவரங்களை தேர்தல் முடிந்த 75 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தவிர வேட்பாளர்கள் தங்களது அதிகாரப்பூர்வ சமூகவலைதள கணக்குகள் குறித்த விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும்.