தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் மேலாளராகப் பணியாற்றி வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அவதேஷ் சிங் என்பவர், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பெண் ஊழியர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாசத் தகவல்களை அனுப்பியதுடன், தனது உள்ளாடைகளைத் துவைத்துப் போடுமாறு கூறி அவர்களைக் கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது.
இவருடைய தொல்லை நாளுக்கு நாள் எல்லை மீறியதால், பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மேலாளர் அவதேஷ் சிங்கை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுங்கச்சாவடி மேலாளர் ஒருவர் பெண் பணியாளர்களிடம் இத்தகைய அநாகரீக செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.