தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்று மே 04-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அடுத்தடுத்து டெல்லி சென்றனர்.
அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பழனிசாமி சத்தித்த பின்னர், டிடிவி தினகரனுடன், அன்புமணி ராமதாஸும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயலின் சென்னை பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை அவர், காலை 09 மணி அளவில் சென்னை வந்தடையவுள்ளார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் அவர் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை எங்கு வேண்டுமானாலும் நடத்துவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார்.
அத்துடன், முதலமைச்சருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டதாகவும், டெல்லி என்றாலே திமுகவினருக்கு நடுக்கம் ஏற்படுவதாகவும் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.