ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி அதிகரித்துள்ள நிலையில், அடுத்து குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 28 -அம்மா தேதி முதல் ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதல் நடத்திவருகிறது. 20 நாட்களை கடந்துள்ள இந்த தாக்குதலால் உலகின் பொருளாதார சந்தை ஸ்தம்பித்து போயுள்ளது. இந்த சூழலில், உலகின் முக்கிய கடல் மார்க்கமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. அத்துடன் அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் இல்லை என்றால் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், நீர்வழி போக்குவரத்து பாதித்துள்ளது. இதனால் என்னை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்துள்ளதால், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இதன் எதிரொலியாக சமையல் எரிபொருளான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேநேரம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் சமீபத்தில் ப்ரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கான டீசல் விலையும் உயர்த்தப்பட்டது. மேலும், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் மூலப் பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.
இதன் காரணங்களால் நேற்று தமிழ்நாட்டில் குடிநீர் விலை உயர்ந்துள்ளது. அதாவது சுத்திகரிக்கப்பட்டு, பாட்டிலில் அடைத்து விற்கப்படும் 200 எம்.எல். முதல் 20 லிட்டர் தண்ணீர் கேன் வரை அனைத்தின் விலையும் உயர்ந்துள்ளது.
தற்போது ஈரான் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததற்கு அந்நாடு பதிலடி கொடுத்துள்ளது. தங்கள் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவுதி, அமீரகம், பஹ்ரைன், கத்தார் ஆகியவற்றில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு ஈரான் அந்நாடுகளின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், பாலைவன நாடுகளான வளைகுடா நாடுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.