திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போடியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஆனால் திமுக தலைமை அவரது விருப்பத்திற்கு இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லையென்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியல் களத்திற்கு வர விரும்புகிறாரா கனிமொழி ?
தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி, மக்களவை எம்.பி என டெல்லிக்கே அனுப்பி வைக்கப்படும் கனிமொழி, தமிழ்நாடு அரசியலில் களமிறங்க விரும்புவதாககவும் அதற்காகவே அவரது பிறந்தநாள் அன்று சட்டமன்ற வடிவில் அவரது ஆதரவாளர்கள் கேக் வெட்டியதாகவும், சுவரோட்டிகள் ஒட்டியதாகவும் கூறப்படுகிறது. இது கனிமொழியின் ஒப்புதலுடனே நடைபெற்று வருவதால், இந்த முறை அவர் நிச்சயம் தூத்துக்குடி மாவட்டம் அல்லது நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பி வந்த நிலையில், இதுவரை திமுக தலைமையில் இருந்து கனிமொழிக்கு க்ரின் சிக்னல் கிடைக்கவில்லை.
திமுக தலைவரை சந்தித்து எம்.எல்.ஏ சீட் கேட்டாரா கனிமொழி ?
முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினையே நேரில் சந்தித்து தன்னுடைய விருப்பத்தை கனிமொழி தெரிவித்துவிட்டதாக கூறப்படும் நிலையில், இதுவரையில் அவருக்கு சாதகமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. கனிமொழி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் விவகாரம் திமுகவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், கனிமொழிக்கு ஆதரவாக கருத்துச் சொல்லியிருக்கிறார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
கனிமொழிக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்
”ஆளுமையான அரசியல் தலைவராக இருக்கும் கனிமொழிக்கு, கலைஞரின் மகளான கனிமொழிக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க மாட்டார்கள் என்றும் கனிமொழிக்கே சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிக்கு மேல் தருவார்கள்” என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கனிமொழிக்கு ஆதரவாக சீமான் குரல்கொடுத்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
கலைஞரின் மகளுக்கே திமுகவில் சீட் இல்லையா ? காரணம் யாரு - சொல்லுங்க பார்ப்போம் ? pic.twitter.com/4tFIjPW7wP
— Pokkiri_Victor (@Pokkiri_Victor) March 24, 2026
திமுகவை சாடிய இடும்பாவனம் கார்த்தி
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி ‘திமுகவில் பெண்களுக்கு சரிபாதி வாய்ப்பு எல்லாம் வழங்கவே மாட்டார்கள். ஏன், கனிமொழிக்கே எம்.எல்.ஏ தேர்தலில் நிற்க சீட் கொடுக்க மாட்டார்கள்’ என விமர்சித்திருக்கிறார்.
திமுகவில் பெண்களுக்கு சரிபாதி வாய்ப்பெல்லாம் ஒருநாளும் எதிர்பார்க்க முடியாது.
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) March 24, 2026
அவ்வளவு ஏன்? கனிமொழிக்கே மாநில அரசியலில் வாய்ப்பு அளிக்க மாட்டார்கள்; சட்டமன்றத் தேர்தலில் தொகுதி வழங்க மாட்டார்கள்.
தன் மகன் உதயநிதிக்காக அவரைவிட அரசியலில் மூத்தவரான கனிமொழியை காவுவாங்குவார்…
கனிமொழி ரியாக்ஷன் என்ன ?
மாநில அரசியலுக்கு திரும்புவது குறித்தும், திமுக தலைமையிடம் எம்.எல்.ஏ சீட் கேட்டது பற்றியும் வெளிப்படையாக இதுவரை கனிமொழி எந்த பதிலும் அளிக்காத நிலையில், அவருடைய எதிர்காலத் திட்டம் என்னவென்பது தெரியாமல் அவரது ஆதரவாளர்கள் விழிபிதுங்கி நிற்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, கனிமொழி ஆதரவாளர்களாக அறியப்பட்ட பலரும் கடந்த காலங்களில் உதயநிதி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்ட நிலையில், மீதமிருப்பவர்களும் தங்களுடைய தனிப்பட்ட அரசியல் எதிர்காலத்திற்கான முடிவை எடுக்கவும், ஆதரவு நிலைப்பாட்டை மாற்றவும் தயாராகிவருகின்றனர் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.