மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு; பாஜக தேசிய தலைவரைச் சந்தித்த லியாண்டர் பயஸ்; கலக்கத்தில் மம்தா..!
Seithipunal Tamil March 26, 2026 03:48 AM

இந்தியாவின் மிகவும் பிரபல டென்னிஸ் வீரராக விளங்கியவர் லியாண்டர் பயஸ். இவர், சமீபத்தில் கொல்கத்தாவில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்துள்ளார். இது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லியாண்டர் பயஸ்.சந்திப்பின் போது மேற்கு வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யாவும் உடனிருந்துள்ளார். 

294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கத்தில், வரும் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் 02 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழலில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பாஜகவும் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, இரண்டு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், லியாண்டர் பயஸ் கொல்கத்தா வந்த பாஜக தலைவரைச் சந்தித்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் விரைவில் பாஜகவில் இணையலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், இந்த தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, லியாண்டர் பயஸ் கடந்த 2021-ஆம் ஆண்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரை அன்புடன் ”தம்பி” என்று அழைத்தார். இருப்பினும், ஜனவரி 2022-இல் அறிவிக்கப்பட்ட கட்சியின் 69 உறுப்பினர்களைக் கொண்ட கோவா மாநிலக் குழுவிலிருந்து பயஸ் நீக்கப்பட்டார். 

இது கட்சிக்குள் அவரது பங்கு குறித்த கேள்விகளை எழுப்பியதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. இந்த நிலையில்தான், லியாண்டர் பாஜக தலைவரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இது, திரிணாமுல் காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.