அடிக்கடி நினைவிழப்பு..? மனைவி பற்றி அதிக கவலை; இம்ரான் கானின் சிறைவாசம் குறித்து மகன்கள் வேதனை..!
Seithipunal Tamil March 26, 2026 04:48 AM

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது ஊழல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தண்டனையாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடியாலாவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், கடந்த ஆண்டின் இறுதியில், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கும் அவரது மனைவிக்கும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில், இம்ரான் கானின் மரணம் அடைந்துள்ளதாக ஒரு புறம், மறுபுறம் அவரது உடல்நிலை குறித்து பல வதந்தி செய்திகள் பரவி, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இந்த செய்திகளை பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MOIB) மறுத்துள்ளது.

இந்நிலையில், சிறையில் இருக்கும் இம்ரான் கானின் உடல்நலம் மோசமடைந்து வருவதாகவும், அவரது கண்பார்வை குறைந்து வருவதாகவும் அண்மையில் செய்தி வெளியாகின. இதையடுத்து 14 கிரிக்கெட் கேப்டன்கள் இம்ரான் கானுக்கு 'உடனடி மருத்துவச் சிகிச்சை' வழங்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதினர். 

இந்நிலையில், அவருக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அத்துடன்,இம்ரான்கானின் மகன்களான சுலைமான் ஈசா கான் மற்றும் காசிம் கான் இருவரும், அவருடன் தொலைபேசியில் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு இப்போதுதான் அவர்கள் மீண்டும் பேசியுள்ளனர்.

இதனையடுத்து, தன் தந்தையின் (இம்ரான் கான்) உடல்நிலை குறித்து அவர்கள் கூறுகையில், 'அவர் நலமாக இருப்பதாகவும் கண்பார்வை சற்று மேம்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், அவர் தனது மனைவியின் நிலை குறித்து கவலைப்பட்டார்.'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன்,' (தந்தை) அவரைப் போலவே அவரது மனைவியும் மிகவும் மோசமான உடல்நலப் பாதிப்புடன் இருக்கிறார். எனது தந்தையை, அமைதியாகச் சிறைக்குள் முடக்கி வைத்து, அவருடைய அரசியல் இயக்கத்தின் வலிமையைச் சிறிது சிறிதாகக் குறைத்துவிட ஆட்சியாளர்கள் முற்படுகிறார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர் படிப்பதற்குப் புதிய புத்தகங்கள் வழங்கப்படுவதில்லை என்றும், சிறை அறையின் மின் இணைப்பைத் துண்டிக்கின்றதாகவும், சிறைவாசமானது அவரை மனரீதியாக இன்னும் வலிமைமிக்கவராக மாற்றியுள்ளது; அவர் தியானப் பயிற்சியை அதிக அளவில் மேற்கொண்டு வருகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சிறைச்சாலையின் சூழல் எவ்வளவு கடுமையாகவும் கொடூரமாகவும் இருந்தாலும் சரி, அதை இப்படித்தான் கடக்க வேண்டும் என்ற ஒரு மனநிலையில் அவர் உள்ளதாகவும், அவருக்கு அவ்வப்போது நினைவிழப்பு ஏற்படுகிறதாக அவரது மகன்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து இம்ரானின் மகன்கள் தங்கள் தந்தையைப் பார்க்கவில்லை. பாகிஸ்தானுக்குச் செல்வதற்கான விசாக்களுக்காக அவர்கள் இன்றும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.