ஏரியில் தவறி விழுந்த நண்பனை காப்பாற்ற சென்ற சிறுவர்கள்...! - பரிதாபமாக உயிரிழந்த 3 சிறுவர்கள்
Seithipunal Tamil March 26, 2026 06:48 PM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் அருகே உள்ள மணியம்பட்டு ஏரியில் நடந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

திருவிநகர் பகுதியைச் சேர்ந்த செல்வத்தின் மகன் பார்த்திபன் (13), சரவணனின் மகன் எஸ்.நித்திஷ் (14), கமலக்கண்ணனின் மகன் கே.நித்திஷ் (13) ஆகியோர் தங்கள் பள்ளிகளில் முறையே 7, 8 மற்றும் 6ஆம் வகுப்புகளில் படித்து வந்தனர்.

நண்பர்களாக இருந்த இந்த மூவரும் நேற்று காலை ஏரி அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக ஒருவரின் கால்தடம் தவறி ஏரிக்குள் விழுந்தார்.

அவரை காப்பாற்ற முயன்ற மற்ற இரு சிறுவர்களும் தண்ணீரில் இறங்கி சிக்கிக் கொண்டு மூழ்கினர். சில நிமிடங்களில் இந்த சம்பவம் விபரீதமாக மாறியது.சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மூவரையும் மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இந்த தகவல் அறிந்த சிப்காட் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, உடல்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.