தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மயிலாப்பூரில் தனது தேர்தல் பிரசாரத்தை உற்சாகமாகத் தொடங்கினார். இந்த பிரசாரக் கூட்டத்தில் அதிமுக தொண்டர் ஒருவர், தமிழகத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறையின் வெளியே வைக்கப்பட்டிருப்பது போன்றே, “எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்” என்று அச்சிடப்பட்ட பெயர் பலகையை ஏந்தி வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மேலும் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்த வேண்டும் என்ற அதிமுக தொண்டர்களின் தீவிர விருப்பத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்தச் செயல், அங்கு திரண்டிருந்த கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பாளர் போலவே எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனால் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகளுடன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில், முதலமைச்சர் பெயர் பலகையுடன் வந்த தொண்டரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்குத் தொண்டர்கள் அளிக்கும் இந்த அதீத ஆதரவு, வரவிருக்கும் தேர்தலில் அதிமுக கூட்டணியின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.