உலக நாடுகள் தங்கத்தை விற்கும் நிலை!தங்கத்தை டன் கணக்கில் மார்க்கெட்டில் கொட்டிய துருக்கி.. ஏன் தெரியுமா?
Seithipunal Tamil March 28, 2026 03:48 PM

உலக பொருளாதாரத்தில் புதிய மாற்றத்தை சுட்டிக்காட்டும் வகையில், பல நாடுகள் தங்களிடம் இருக்கும் தங்கச் சேமிப்புகளை விற்கத் தொடங்கியுள்ளன. பொதுவாக நெருக்கடி காலங்களில் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கமே இப்போது பணமாக மாற்றப்படுவது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான பதற்றமான போர் சூழல் உலக பொருளாதாரத்தை அதிரவைத்துள்ளது. இந்த நிதி அழுத்தத்தை சமாளிக்க பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது தங்க இருப்புகளை குறைத்து, அதனை பணமாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த பட்டியலில் முன்னிலையில் இருக்கும் நாடு துருக்கி. சமீபத்திய தகவல்களின்படி, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் துருக்கி மத்திய வங்கி சுமார் 59 டன் தங்கத்தை குறைத்துள்ளது. இதில் ஒரு பகுதி நேரடியாக விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலானவை வெளிநாட்டு நாணயப் பரிமாற்றத்திற்காக ‘ஸ்வாப்’ ஒப்பந்தங்கள் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டிலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த துருக்கி 159 டன் தங்கத்தை விற்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கத்தை அதிகமாக சேமித்திருந்த போலந்து நாடும் தற்போது தன் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க தங்கத்தை விற்க திட்டமிட்டுள்ளது. சுமார் 13 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்று ராணுவ செலவினத்தை உயர்த்த அந்நாட்டு மத்திய வங்கி முயற்சியில் உள்ளது.

சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கூறுவதாவது, “மத்திய வங்கிகள் லாப நோக்கில் செயல்படுவதில்லை. ஆனால் தற்போதைய சூழலில் தங்கத்தை வைத்திருப்பதை விட, உடனடி பணப்புழக்கம் (Liquidity) அவர்களுக்கு அவசியமாகியுள்ளது” என்பதாகும்.

பணவீக்கம், போர் செலவுகள் மற்றும் பொருளாதார அழுத்தம் ஆகிய காரணங்களால், தங்கம் வாங்கும் அளவை குறைத்து, இருப்புகளை விற்பனை செய்யும் இந்த போக்கு உலக தங்க விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருகாலத்தில் பாதுகாப்பின் அடையாளமாக இருந்த தங்கம், இன்று அவசர தேவைக்கான பணமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது உலக பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களின் தெளிவான பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.