மும்பை மீரா ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஆசிஷ் மேஸ்ரம். டிவி நடிகரான ஆசிஷ் வீட்டில் சுமன் காம்ப்ளே என்ற 37 வயது பெண் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் வீட்டில் வேலை செய்தபோது அடிக்கடி ஆசிஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. சுமனை தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி நிர்ப்பந்தம் செய்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசிஷ் வீட்டில் சுமன் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஆசிஷ் சம்பவம் நடந்த வீட்டிற்குள் சென்றுவிட்டு அவசரமாக வெளியில் செல்வது பதிவாகி இருந்தது.
கொலையாளி அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவரை கண்டுபிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆசிஷ் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் தங்கி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மும்பை போலீஸார் ஆந்திராவிற்கு விரைந்தனர். அவர் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்ற போது கைது செய்தனர். அவரை மும்பைக்கு கொண்டு வர போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ''கொலை செய்யப்பட்ட பெண்ணை ஆசைக்கு இணங்கும்படி இதற்கு முன்பு ஆசிஷ் நிர்ப்பந்தம் செய்து வந்தது தெரிய வந்துள்ளது. ஆசிஷ் கோரிக்கையை அப்பெண் நிராகரித்துள்ளார். சுமன் கடந்த சில ஆண்டுகளாக ஆசிஷ் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். அந்த வீட்டில் முதலில் ஆசிஷ் சகோதரர்தான் வசித்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் ஆசிஷ் வந்து சேர்ந்து கொண்டார்.
ஆசிஷ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் சுமன் அவரது வீட்டு வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.
இதையடுத்து ஆசிஷ் சுமனின் மகனுக்கு போன் செய்து, உனது தாயார் தொடர்ந்து எங்களது வீட்டில் வேலை செய்யாவிட்டால் அல்லது எனது பாலியல் ஆசைகளுக்கு இணங்காவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். சுமனிடம் அவரது மகன் இது குறித்து விசாரித்தபோது நடந்த சம்பவத்தை தெரிவித்தார். சுமனின் மகன் ஆசிஷை நேரில் சந்தித்து தனது தாயாரிடமிருந்து விலகி இருக்கும்படி எச்சரித்தார்.
ஆசிஷ் சகோதரர் சுமனை தொடர்பு கொண்டு இனி எனது சகோதரர் ஆசிஷ் என்னுடன் வீட்டில் இருக்கமாட்டார் என்றும், எனவே தொடர்ந்து வந்து வீட்டு வேலைகளை செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். எனவே சுமன் மீண்டும் வீட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். இது குறித்து தெரிந்து கொண்டுதான் சுமன் வீட்டில் இருந்த நேரம் பார்த்து, ஆசிஷ் கொலை செய்துவிட்டு சென்றுள்ளார். சம்பவம் நடந்தபோது என்ன நடந்தது என்பது ஆசிஷை விசாரித்தால்தான் தெரிய வரும்" என்று போலீஸார் தெரிவித்தனர்.