ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதய்யாபாளையம் அருகே உள்ள நரசாராஜு அக்ரஹாரம் கிராமத்தில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிழைப்பு தேடி தமிழ்நாட்டின் வெங்கலச்சேரி கிராமத்திலிருந்து ஆந்திராவிற்குச் சென்று, செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த தம்பதி வெங்கடேஷ் – ஹைமாவதி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 6 மாதமே ஆன ஒரு பெண் குழந்தையும் இருந்தனர்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை அந்த 6 மாதக் குழந்தை பசியால் இடைவிடாமல் அழுதுகொண்டே இருந்துள்ளது. வேலையில் இருந்த பதற்றமோ அல்லது குடும்பச் சுமையோ, அழுத குழந்தையைச் சமாதானப்படுத்த முடியாத ஆத்திரத்தில், தாய் ஹைமாவதி செய்த காரியம் அக்கம் பக்கத்தினரை உறைய வைத்துள்ளது. தொடர்ந்து அழுதுகொண்டிருந்த அந்தப் பிஞ்சு குழந்தையின் கழுத்தை, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தாய் ஹைமாவதி பலமாக நெரித்துக் கொன்றுள்ளார்.
குழந்தையின் சத்தம் திடீரென அடங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வரதய்யாபாளையம் சி.ஐ முரளி தலைமையிலான போலீசார், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
“பசிக்கு பால் கேட்டு அழுத குழந்தையைக் கொன்றேவிட்டேன்” என ஹைமாவதி வாக்குமூலம் அளித்திருப்பது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. தற்போது அந்தத் தாய் கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.