2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மக்கள் மத்தியில் முன்வைத்துள்ள கேள்வி இப்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “மக்களுக்குச் சேவை செய்ய வருகிறோம் என்று சொல்பவர்கள், எதற்காக வாக்கிற்குப் பணம் கொடுக்கிறார்கள்? என்பதை மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்” என அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிப்பது வெறும் ஒரு நாள் நிகழ்வு அல்ல, அது நம் எதிர்காலத்தையே அடகு வைக்கும் செயல் என்பதை அவர் மிகத் தெளிவாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார். ”தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் என அனைவரின் ஆட்சியையும் மக்கள் பார்த்துவிட்டார்கள். ஒருமுறையாவது எனக்கு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள்” என அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
“பணத்தை வாங்கினோம், வாக்கைச் செலுத்தினோம் என்று கடந்துவிடாமல், பொறுப்பான குடிமகனாகச் சிந்தித்து வாக்களியுங்கள்” என அவர் வலியுறுத்தியுள்ளார். ஊழலற்ற அரசியலை முன்னெடுக்கத் துடிக்கும் சீமானின் இந்தப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் ‘ஷேர்’ செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. பண அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் முன்வருவார்களா? என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது