உஷார்.. நாளை கடைசி தேதி... இதைச் செய்யலைன்னா 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? ஏப்.1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்!
Dinamaalai March 30, 2026 09:48 AM

மறந்துடாதீங்க. நாளை மார்ச் 31 கடைசி தேதி. ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் மின் பயன்பாடு மற்றும் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், மின் விரயத்தைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் இலவச மின்சாரம் தொடர்பான அறிவிப்பு நுகர்வோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

100 யூனிட் இலவச மின்சாரம்: மார்ச் 31 கடைசி நாள்!

தமிழக அரசு வழங்கி வரும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரச் சலுகையைத் தொடர்ந்து பெற வேண்டுமானால், நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி நாள் நாளையுடன் முடிவடைகிறது.  நாளை மாலைக்குள் ஆதார் இணைப்பை உறுதி செய்யத் தவறினால், ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் இலவச மின்சாரச் சலுகை தற்காலிகமாக நிறுத்தப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

ஸ்மார்ட் மீட்டர்கள் வருகை:

ஏப்ரல் மாதம் முதல் தமிழகம் முழுவதும் வீடுகளில் 'ஸ்மார்ட் மீட்டர்கள்' பொருத்தும் பணி தீவிரமடைய உள்ளது. இவை மொபைல் சார்ஜர் போன்ற மிகச்சிறிய மின் நுகர்வைக் கூட துல்லியமாகக் கணக்கிடும். இதனால் மின் பயன்பாட்டு அளவு முந்தைய மாதங்களை விடச் சற்று கூடுதலாகத் தெரிய வாய்ப்புள்ளது.

இனி ஊழியர்கள் நேரில் வந்து கணக்கெடுக்கத் தேவையில்லை; தானியங்கி முறையில் கணக்கீடு செய்யப்பட்டு உங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தி வரும். மின்கசிவு ஏற்பட்டால் உடனடியாக எச்சரிக்கை வரும் வசதியும் இதில் உண்டு.

பீக் ஹவர் கட்டணம்

மின் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் (உதாரணமாக மதியம் மற்றும் இரவு நேரங்கள்) மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறையை மின்வாரியம் ஆலோசித்து வருகிறது. இது முதற்கட்டமாகச் சில மாவட்டங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மின் விநியோகத்தைச் சீராகப் பராமரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் கட்டண முறையில் மாற்றம்:

ஏப்ரல் 1 முதல் மின் கட்டணத்தைச் செலுத்துவதில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் கட்டணம் செலுத்துவோர் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும் என்ற விதிமுறை தீவிரப்படுத்தப்பட உள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.