அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொண்ட சமாதான முயற்சியை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் இஸ்லாமாபாத் நகரில் இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்திருந்த நிலையில் மும்பையில் உள்ள ஈரானிய தூதரகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னெடுத்துள்ள இந்தச் சமாதான முயற்சியில் ஈரானுக்கு எவ்விதப் பங்களிப்பும் இல்லை என்றும் இது முழுக்க முழுக்க பாகிஸ்தானின் சொந்தத் திட்டம் என்றும் ஈரான் தூதரகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தூதரகக் கொள்கைகள் அடிக்கடி மாறும் தன்மை கொண்டவை என்பதால் அவர்களின் பேச்சை நம்ப முடியாது என்றும் ஈரான் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே போர் நிறுத்தம் குறித்துத் துருக்கி மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் பாகிஸ்தான் நடத்தத் திட்டமிட்டிருந்த ஆலோசனைக் கூட்டமும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மீண்டும் கடும் துப்பாக்கிச் சூடு வெடித்ததைத் தொடர்ந்து இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் முடிவுக்கு வருவதை வரவேற்பதாகக் கூறியுள்ள ஈரான் அதே சமயம் இந்தப் போரைத் தொடங்கியது யார் என்பதை உலகம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சியை ஈரான் புறக்கணித்துள்ளதால் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.