ஈரானின் தாக்குதல் என குவைத் அதிகாரிகளால் குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, துபாய் கடற்கரைக்கு அப்பால் முழுமையாக கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. இது உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடங்களில் ஒன்றான துபாய் கடற்பகுதியில் நடந்துள்ளது, கடல்சார் பாதுகாப்பு குறித்த புதிய அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது.
அல் சல்மி என அடையாளம் காணப்பட்ட அந்த கப்பல், துபாய் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தபோது தாக்கப்பட்டது. இதில் அந்த கப்பல் தீப்பற்றி எரிந்ததோடு, அதன் மேல்தளத்தில் கட்டமைப்பு சேதமும் ஏற்பட்டது. குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனை (KPC) மேற்கோள் காட்டி, இந்த சம்பவத்தால் எண்ணெய் கசிவு ஏற்படக்கூடும் என்று குவைத்தின் அரசு செய்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.
வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்களைக் குறிவைத்து நடத்தப்படும் தொடர் தாக்குதல்களின் சமீபத்திய நிகழ்வாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது.
Iran is consistent in its promises
— 🇷🇺 STANISLAV KRAPIVNIK 🇷🇺 (@STANISKRAPIVNIK) March 30, 2026
According to media reports, a ship that attempted to exit the Strait of Hormuz without Iran's permission was attacked. pic.twitter.com/hmUjCw7cMM
ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வான்வழி அல்லது கடல்வழி ட்ரோன்களை பயன்படுத்தி நடத்தப்படும் இந்த தாக்குதல்கள், பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து தீவிரமடைந்துள்ளன.
உள்ளூர் கடல் பகுதியில் குவைத் எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் என கூறப்படும் சம்பவத்திற்கு பதிலளித்து வருவதாக துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவசரகால கடல்சார் தீயணைப்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவத்தின் தீவிரம் அதிகமாக இருந்தபோதிலும், கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவைத் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து பெறப்பட்ட சுமார் 2 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை அல் சல்மி கப்பல் ஏற்றிச் சென்றதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. லாயிட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேங்கர் டிராக்கர்ஸ் ஆகியவற்றின் கப்பல் போக்குவரத்துத் தரவுகள், அந்த கப்பல் சீனாவின் கிங்டாவோவிற்குச் சென்று கொண்டிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளன. சேதத்தின் முழு அளவை மதிப்பிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கேபிசி உறுதிப்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் வழியாக தங்கள் அனுமதி இல்லாமல் செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், இந்த கப்பல் அந்த வகையில் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.