நாட்டில் உள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போல வங்கி கணக்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஒருவரின் பொருளாதார ரீதியான வரவு, செலவுகளுக்கும், சேமிப்புகளுக்கும் முக்கியமான அங்கமாக வங்கி உள்ளது. வங்கிச் சேவையை நாட்டில் பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை சொற்ப அளவே ஆகும்.
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் செயல்பாட்டையும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி புதிய நடைமுறை ஒன்றை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, பேமென்ட்ஸ் சுவிட்சிங் சர்வீஸ் என்ற புதிய செயல்முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
அதாவது, ஒரு வங்கியில் பயன்படுத்திய வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமல் வங்கியை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதியே இந்த பேமென்ட்ஸ் சுவிட்சிங் சர்வீஸ் ஆகும். பொதுவாக, ஒருவரின் வங்கிக்கணக்கு எண்ணுடன் மியூச்சுவல் பண்ட், சம்பளகணக்கு, கடன் தவணை போன்ற பல்வேறு முக்கியமான விவரங்கள் தொடர்பில் இருக்கும். இதனால், வங்கிக்கணக்கை மாற்றும்போது அனைத்து சேவைகளிலும் புதுப்பிக்கும் சூழல் உண்டாகும்.
ஆனால், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் வங்கியை மாற்றிக்கொண்டாலும் வங்கிக்கணக்கு எண் மாறாது. அனைத்து பேமெண்ட் மேண்டேட்களும் தானாகவே மாறிவிடும். மேலும், இஎம்ஐ முறையும் மாறாமல் புதிய வங்கியில் இருந்து தானாகவே பிடித்தம் செய்து கொள்ளப்படும். வங்கியின் சேவை பிடிக்காவில் வங்கியை மாற்றிக்கொள்ளும் வசதி எளிதாக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி இந்த முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்புத் தொகை கணக்கு, நடப்புக் கணக்கு, தொடர்பு வைப்பு கணக்கு எண் ஆகிய கணக்குகள் உள்ளது. பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கே பயன்படுத்துவார்கள்.
வர்த்தகம் செய்பவர்கள், வியாபாரிகள் நடப்புக்கணக்கு பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். ஏனென்றால், வங்கியில் கடன் வாங்குவதற்கு இந்த கணக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ரிசர்வ் வங்கி கொண்டு வர உள்ள இந்த செயல்முறையானது எந்த வங்கிக்கணக்கு பயனாளர்களுக்கு? என்ற தகவல் வெளியாகவில்லை. பெரும்பாலும் சேமிப்பு வங்கிக் கணக்கு பயன்படுத்துபவர்களுக்கே இந்த சேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.