16 ஆண்டுகள் பணியாற்றினேன், திடீரென வெளியேற்றிவிட்டார்கள்.. வேலையிழந்த Oracle பணியாளர் சோகம்..!
WEBDUNIA TAMIL April 01, 2026 09:48 PM

Oracle நிறுவனத்தில் 16 ஆண்டுகள் பணியாற்றிய மூத்த மென்பொருள் மேலாளர் ரிஷிகேஷா நர்ஷா, பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது மனவருத்தத்தை LinkedIn தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொழில்நுட்ப துறையில் 2026-ல் தொடரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இவரது பணி முடிவுக்கு வந்துள்ளது. இத்தனை ஆண்டு கால உழைப்பு திடீரென நின்றபோது, காலையில் எழுந்தவுடன் பணிகளை திட்டமிட துடிக்கும் மனநிலை விசித்திரமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தனது தலைமைத்துவ பண்புகளை மெருகேற்றிய Oracle நிறுவனத்திற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பல சவாலான திட்டங்களில் தன்னுடன் பணியாற்றிய சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்த இக்கட்டான நிலையிலும் நேர்மறையான அணுகுமுறையுடன், தனது 16 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டு அடுத்தகட்ட பயணத்திற்கு தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். தொழில்நுட்ப துறையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக பல நிறுவனங்கள் இத்தகைய கடினமான முடிவுகளை எடுத்து வருகின்றன.

ரிஷிகேஷாவின் இந்த பதிவு, வேலையை இழந்த பல தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.