அதிமுக ஆட்சியை காப்பாற்றித் தந்த எனக்கே சீட் தரவில்லை என சபாநாயகர் தனபால் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான தனபால், “ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆட்சியை காப்பாற்றி கொடுத்த எனக்கே சீட் வழங்கவில்லை. விருப்ப மனு அளித்தபோதும், போட்டியிட விருப்பமா? இல்லையா என்று கூட என்னிடம் யாரும் கேட்கவில்லை. அவிநாசியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவிநாசி தொகுதியை பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கிவிட்டு, எனக்கு சீட் வழங்காமல் புறக்கணித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 18 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினார்கள். போர்க்கொடி தூக்கிய 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். ஆட்சியை காப்பாற்றி கொடுத்த போதிலும் தற்போது கட்சிக்குள் எனக்கு மரியாதை இல்லை. ராசிபுரம், அவிநாசி தனி தொகுதிகளை அதிமுகவுக்கு அழுத்தம் தந்து பாஜக பெற்றுள்ளது. பாஜக சொல்கிற அனைத்திற்கும் பழனிசாமி வளைந்து கொடுத்து செல்கிறார்” என்றார்.