ஈழப்போர் தொடர்பாக தமிழில் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டாள் , சந்தோஷ் சிவன் இயக்கிய இனம் ஆகிய படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இரு படங்களுமே ஈழப்போரை வெளியாட்களின் பார்வையில் அல்லது கருத்தியல் ரீதியாக ஈழப்போரை அனுகியிருக்கின்றன. போர் நடைபெற்ற சூழலில் இலங்கையில் வளர்ந்த ஒரு நபர் தனது சொந்த வாழ்க்கையில் இருந்து ஒரு படத்தை இயக்கி அது உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை. தமிழர்களுக்கு ஈழப்போர் என்பது அந்நியப்பட்ட நிகழ்வல்ல. ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் போர் தொடர்பாக வெளியான செய்திகள் வழியாகவே ஒரு சித்திரத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். போரை வேடிக்கைப் பார்ப்பது போரில் வாழ்வதும் என்பது இரு முற்றிலும் வெவ்வேறான நிலைகள். அந்த வகையில் நீளிரா திரைப்படம் இலங்கையில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் ஒரு நிலத்தில் நிகழும் போர் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையில் எவ்வளது நுட்பமான தாக்கத்தையும் மாற்றங்களையும் ஏற்படுத்தக் கூடியது என்பதை நீளிரா படம் நமக்கு காட்டுகிறது.
நீளிரா என்றால் நீண்ட இரவு என்று அர்த்தம். 1987 களில் இலங்கை மற்றும் தமிழ் ஈழப் போராளிகள் இடையில் சமரசம் செய்யும் நோக்கத்தில் இந்திய அமைதி காக்கும் படை இந்திய அரசால் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒருபக்கம் இலங்கை ராணுவம் , இன்னொரு பக்கம் தமிழீழ விடுதலைப் போராளிகள் இன்னொரு பக்கம் இந்திய ராணுவம் என மூன்று தரப்பினர் மத்தியில் இலங்கை வாழ் தமிழர்களின் வாக்கை நெருக்கடிக்கு உள்ளாகிறது. இந்த சூழலில் யாழ்ப்பாணத்தில் வாழும் ஒரு எளிய தமிழ் குடும்பம் தங்களது வீட்டு பெண்ணை திருமணம் செய்து வைத்து அவரை கடல் கடந்து வழியனுப்ப முயற்சிக்கிறார்கள். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு போராளிகளை மறைந்திருந்து தாக்க இந்திய ராணுவம்
திட்டமிடுகிறது. தாக்குதலுக்காக அனுப்பப்பட்ட நவீன் சந்திராவின் தலைமையிலான பிரிவு வழிதவறி தவறுதலாக இந்த திருமண வீட்டை வந்து சேர்ந்துவிடுகிறது. அதிகாலை மீட்பு படையினர் வரும்வரை அவர்கள் அந்த வீட்டில் தான் தங்கியாக வேண்டும். மறுபக்கம் அவர்கள் பதுங்கி இருப்பதை தெரிந்துகொண்ட போராளிகள் அவர்களை தாக்க திட்டமிடுகிறார்கள். இந்த இருதரப்பினர்களிடையே அந்த வீட்டுப் பெண்ணுக்கு திருமணம் நடந்ததா என்பதே நீளிரா படத்தின் மீதிக்கதை.
ஈழப்போர் பற்றி நவீன இலக்கியங்கள் கனிசமான அளவு எழுதப்பட்டிருந்தாலும் திரைப்பட அனுபவம் என்பது மிகக் குறைவே. அந்த வகையில் நீளிரா திரைப்படம் ஒரு நல்ல சிறுகதைக்கான அம்சங்களைக் கொண்ட ஒரு திரைப்படம். 25 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்த போர் பற்றி ஒரு கதையை சொல்கையில் அதில் எந்த விஷயத்தை முக்கியமாக சொல்ல வேண்டும் , எவ்வளவு சொல்ல வேண்டும் என்கிற குழப்பம் ஏற்படலாம். அந்த வகையில் மையக்கதையில் கவனம் செலுத்தினாலும் சின்ன சின்ன விஷயங்களின் மூலம் பல்வேறு விஷயங்களை பார்வையாளர்களின் கற்பனைக்கு திறந்து வைக்கிறார் இயக்குநர் சோமீதரன்.
மேற்பார்வைக்கு போரில் மாட்டிக்கொண்ட ஒரு குடும்பம் ஒரு திருமணத்தை நடத்தி முடிக்குமா என்கிற விறுவிறுப்புடன் செல்கிறது படம். ஆனால் இந்த விறுவிறுப்பான கதைக்குள் காதல் , ஒரு அன்னையின் தவிப்பு , போரை விளையாட்டாக பாவிக்கும் சிறுவர்கள் , பிறக்கப்போகும் ஒரு குழந்தையின் அழுகுரல் , இன உணர்வு , என ஒரு முழு வாழ்க்கைச் சித்திரத்தை இந்த படத்திற்குள் நம்மால் பார்க்க முடியும். இப்படம் வெளிப்படையாக வன்முறை காட்சிகள் காட்டுவதில்லை என்றாலும் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் வன்முறை உள்ளது. கதையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் வன்முறையை நோக்கி திரும்புவதற்கான சாத்தியங்களைக் கொண்டவை. அந்த வன்முறைக்கு பதிலாக அவர் இந்த கதையை ஒட்டுமொத்த மானுடத்திற்குமான ஒரு உரையாடலை நோக்கி நகர்த்திச் செல்கிறார். ஒரு கலைஞராக இயக்குநர் வெற்றிபெறும் இடமும் அதுவே.
அனைத்து நடிகர்களும் தனித்தனி நடிகர்களாக இல்லாமல் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களாக கதைக்குள் ஒத்திசைத்து நடித்துள்ளார்கள். இந்திய ராணுவ அதிகாரியாக வரும் நவீன் சந்திரா , போராளியாக வரும் சனந்த் ரெட்டியின் நடிப்பு சிறப்பு .
நீளிரா ஒரு சர்வதேச தரத்தில் உருவாகியுள்ள ஒரு தமிழினப்படமும் கூட. கதாபாத்திரங்களை தேர்வு செய்திருப்பது , இலங்கையை காட்டியிருக்கும் விதம் அனைத்துமே ஒரு சுற்றுலா பயணியின் கண்ணோட்டத்தில் இல்லாமல் அந்த நிலத்தில் வாழ்ந்த ஒருவர் காட்டியிருப்பதை இந்த படத்தில் பார்க்கலாம். ஈழப்போர் குறித்த கதைகள் மேலும் திரையில் உருவாவதற்கு இந்த படம் ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இத்தனையும் கடந்து அந்த திருமணம் நடைபெற்றதா இல்லையா ? திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.