டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராகக் களம் இறங்கியது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருப்பதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த தொடர்களில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஜோடிகளைப் பிரித்தது லக்னோ அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக வந்த ரிஷப் பண்ட் ரன்களைச் சேர்க்க முடியாமல் திணறியதுடன் இறுதியில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தது அணியின் வெற்றியைப் பாதித்துள்ளதாக அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
லக்னோ அணியில் அனுபவம் வாய்ந்த பல பயிற்சியாளர்கள் இருந்தும் இத்தகைய தவறான திட்டத்தைத் தீட்டியது ஏன் என்று தமக்கு புரியவில்லை என ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். லக்னோ அணியின் பேட்டிங் வரிசையில் செய்யப்பட்ட மாற்றங்கள் அந்த அணிக்கு எவ்வித பலனையும் அளிக்கவில்லை என்று குறிப்பிட்ட ஸ்ரீகாந்த் தமிழக வீரர் நடராஜனின் பந்துவீச்சை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
நான்காவது வரிசையில் களம் இறங்கிய பதோனியை நடராஜன் மிக எளிதாக வீழ்த்தியதை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார். லக்னோ அணிக்கு ஆரம்பத்தில் பந்துவீச்சில் மட்டுமே சிக்கல் இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில் தற்போது பேட்டிங்கிலும் பெரும் பலவீனம் இருப்பது அம்பலமாகியுள்ளது.
ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கக் கீழ் வரிசையில் சிறந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் இல்லை என்றும் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். எதிரணி கேப்டனின் வியூகத்தால் தான் தொடக்க வீரராக வர நேரிட்டதாக ரிஷப் பண்ட் கூறினாலும் இத்தகைய பரிசோதனைகள் அணிக்குத் தோல்வியையே பரிசாகத் தந்துள்ளது.