ராணுவ ஆட்சியில் கீழ் ஈரான்..? அதிபரின் முடிவுகள் முடக்கம்; உளவுத் துறை அமைச்சர் நியமனத்தில் முறுகல்..?
Seithipunal Tamil April 03, 2026 08:48 AM

அணு ஆயுத போட்டி காரணமாக கடந்த மாதம் 28-ஆம் தேதி காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல் + அமெரிக்கா கூட்டு வான்வெளி தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

போரின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த போரின் ஈரானின் உச்சந்தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் ஐக்கிய அரபு ராட்சியத்தின் முக்கியமான இடங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.

இதனால் ஹார்மூஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் உலகில் கச்சா எண்ணெய் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலாகி அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொருட்களின் விலைவாசியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ஈரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மசூத் பெசெஷ்கியான், அந்நாட்டின் சக்திவாய்ந்த இராணுவ அமைப்பான ஐஆர்ஜிசி எனப்படும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையால் ஓரம் கட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ஒரு ‘அமைதியான ராணுவ அதிகாரக் கைப்பற்றலாக' பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அதவது நாட்டின் முக்கிய நிர்வாக முடிவுகளில் ஐஆர்ஜிசி தற்போது முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துள்ளது. குறிப்பாக, அதிபர் பெசெஷ்கியான் முன்மொழிந்த உளவுத்துறை அமைச்சருக்கான நியமனத்தை ஐஆர்ஜிசி தளபதி அகமது வாஹிதி நேரடியாகத் தலையிட்டுத் தடுத்துள்ளார்.

அதாவது ஈரானின் போர்க்கால சூழலைக் காரணம் காட்டி, பாதுகாப்பு தொடர்பான அனைத்து அதிகாரங்களும் தங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று அந்நாட்டு இராணுவம் பிடிவாதம் பிடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மறுபுறம், உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அயதுல்லா மொஜ்தபா கமேனியின் உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்து மர்மம் நீடிப்பதும், அவருக்கும் அதிபருக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதும் இந்த அதிகாரப் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரான் அதிபரின் பல முடிவுகள் முடக்கப்பட்டுள்ளதால், ஈரானிய அரசாங்கம் தற்போது செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஈரானின் உண்மையான அதிகாரம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இல்லாமல், இராணுவத்தின் கரங்களுக்குச் சென்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.