ஒரு நிறுவனத்தில் திறமையான பணியாளர் விலகுவது அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பாதிக்கும். பொதுவாகப் பணியாளர்கள் ராஜினாமா செய்யும்போது, அவர்களைத் தக்கவைக்க நிறுவனங்கள் சம்பள உயர்வு அல்லது சலுகைகளை வழங்கும்.
ஆனால், பிரீதி மாலிக் என்ற பெண் தொழிலதிபர் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைக் கையாண்டுள்ளார். தனது நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றி வந்த ஒருவர் திடீரென ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தபோது, பிரீதி அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். “உங்களுடைய கனவு வேலையை நீங்களே வடிவமைக்க வேண்டும் என்றால், அது எப்படி இருக்க வேண்டும்?” என்பதே அந்த கேள்வி.
இந்தக் கேள்விக்கு அந்தப் பணியாளர் அளித்த பதில் பிரீதியை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அந்தப் பணியாளர் பணத்திற்காக விலகவில்லை; மாறாக அவருக்குத் தரப்பட்ட வேலைகளில் ஆர்வம் இல்லை என்பது தெரியவந்தது.
அவருக்கு ஆட்டோமேஷன் (Automation) சார்ந்த பணிகளில் அதிக ஆர்வம் இருந்தும், அவருக்குப் பிடிக்காத வேறு சில வேலைகள் ஒதுக்கப்பட்டதே ராஜினாமாவுக்குக் காரணமாக இருந்துள்ளது.
இதை உணர்ந்துகொண்ட பிரீதி மாலிக், உடனடியாக அந்தப் பணியாளரின் பொறுப்புகளை மாற்றி, அவருக்குப் பிடித்தமான திட்டங்களில் பணியாற்ற வாய்ப்பளித்தார்.
இந்தச் சிறிய மாற்றத்தால் அந்தப் பணியாளர் தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற்றதோடு, முன்பை விட அதிக உற்சாகத்துடன் வேலை செய்யத் தொடங்கியுள்ளார்.
பணியாளர்களை வெறும் இயந்திரங்களாகப் பார்க்காமல், அவர்களின் விருப்பங்களைப் புரிந்துகொள்வதே சிறந்த தலைமைத்துவத்திற்கு அழகு எனப் பலரும் பிரீதி மாலிக்கைப் பாராட்டி வருகின்றனர்.