தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்புடன் சூடுபிடித்துள்ளது. இதனை முன்னிட்டு, வேட்புமனு தாக்கல் கடந்த 30ஆம் தேதி முதல் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கமாக உள்ள பாஜக, 27 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

அதில், அவினாசி (தனி) தொகுதியில் மத்திய இணை அமைச்சராக உள்ள எல். முருகன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதே தொகுதியில் திமுக சார்பில் கோகிலா மணி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கமலி, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் களமிறங்கியுள்ளதால், அவினாசி தொகுதி பல்முனைப் போட்டியால் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அவினாசி தொகுதியில் உறுதியாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை எல். முருகன் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “தமிழக மக்களின் பேராதரவுடன் மாநில ஆட்சியையும், அவினாசி வாக்காளர்களின் பேரன்புடன் இந்த தொகுதியையும் தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும்.
தாமரையை மலரச் செய்வோம்..!
அவினாசியை வளர்ச்சி பாதையில் முன்னேற்றுவோம்..!”என உறுதியுடன் தெரிவித்துள்ளார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.