மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரான் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீறி இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எடுத்துள்ள முடிவு சர்வதேச அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மே 2019 முதல் அமெரிக்காவின் அழுத்தத்தால் நிறுத்தப்பட்டிருந்த இந்த வர்த்தகம், தற்போது நிலவும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தவிர்க்க மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைச் சமாளிக்க, இந்தியா தனது நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. இது டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் இந்தியாவின் இந்த நடவடிக்கையை மத்திய எரிசக்தி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இறக்குமதி செய்வதற்கான கட்டணங்களைச் செலுத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது சுமார் 40 நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை வாங்கும் இந்தியா, தனது சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு மலிவான விலையில் கிடைக்கும் இடத்திலிருந்து எண்ணெயைப் பெற்றுக்கொள்ள முழு சுதந்திரம் அளித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவும் இந்தியாவிற்குத் தேவையான அளவு கச்சா எண்ணெயை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதில் உலக நாடுகளின் அழுத்தங்களுக்குப் பணியாமல் தன்னிச்சையாகச் செயல்படுவது அதன் வளர்ந்து வரும் பொருளாதார வலிமையைக் காட்டுகிறது.