தஞ்சாவூர்: தஞ்சை வடக்கு ஒன்றியத்தில் திருவையாறு தொகுதி தி.மு.க. வேட்பாளர் துரை.சந்திரசேகரன் நேற்று திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி கூறி பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதி தி.மு.க. வேட்பாளர் துரை.சந்திரசேகரன் திருவையாறு தொகுதிக்குட்பட்ட தஞ்சை வடக்கு ஒன்றியத்தில் உள்ள விடுதலை நகரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார். அப்போது அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.
தொடர்ந்து பெரியார் நகர், களிமேடு, தெற்கு பள்ளியேறி, பரிசுத்தம் நகர், மேலபள்ளியேறி, கீழப்பள்ளியேறி, டி.சி.டபிள்யூ.எஸ் காலனி, ராஜேந்திரபுரம் காலனி, சுந்தரபாண்டியன் நகர், ஜெபமாலைபுரம், ஆப்ரஹாம் பண்டிதர் நகர் 1,2, சிங்கபெருமாள்குளம், கே.வி.நாயுடு நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
மேலும் ராகவேந்திரா நகர், உமாசிவன் நகர், பத்மாவதி நகர், தனலெட்சுமி நகர், அன்னை நகர், வஹாப் நகர், சப்தகிரி நகர், பாலகிருஷ்ணன் நகர், ஐஸ்வர்யா நகர், சக்கராம்பேட்டை, காமாட்சி அம்மன் நகர், காமாட்சி புரம், கிருஷ்ணா கார்டன், பாலாஜி ரெசிடென்சி, ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரன், தி.மு.க. அரசின் சாதனைகள், தி.மு.க. ஆட்சியில் திருவையாறு தொகுதியில் செய்த நலதிட்டங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் தி.மு.க. வாக்குறுதிகளான மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இல்லத்தரசிகள் தங்களுடைய வீட்டுக்கு தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, கிரைண்டர், மிக்ஸி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை புதுசா வாங்க ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். நெல் விலை உயர்த்தப்படும் போன்ற வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பின் போது தஞ்சாவூர் எம்.பி. ச.முரசொலி, தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.