மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தற்போது எவராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் மறுப்பதாலும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததாலும் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை முழுமையாகத் தகர்த்துவிடுவேன் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கான இறுதி எச்சரிக்கையை வரும் புதன்கிழமை (ஏப்ரல் 8) இரவு 8 மணி வரை நீட்டித்துள்ள அவர், அதற்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்படும் எனத் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு உலக நாடுகளை அதிர வைத்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்காவின் இந்த மிரட்டல்களைக் கேலி செய்துள்ள ஈரான், தங்களின் உள்கட்டமைப்புகள் மீது கை வைத்தால் அதே மொழியில் பதிலடி கொடுக்கப்படும் என்று சவால் விட்டுள்ளதால், ஏப்ரல் 8-ம் தேதி போரின் போக்கை மாற்றும் ஒரு மிக முக்கியமானத் தினமாகப் பார்க்கப்படுகிறது.