திமுகவிற்கு எதிராக நிற்கும் வேட்பாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி... அதிர்ச்சியில் திமுக, முக ஸ்டாலின்!
Seithipunal Tamil April 07, 2026 02:48 AM

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வருகை தந்தார். அப்போது, புதுச்சேரி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி வேட்பாளர்கள் மற்றும் சீட் கிடைக்காத முக்கிய நிர்வாகிகள் ராகுல் காந்தியைச் சந்தித்துத் தங்களது குமுறல்களை வெளிப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் - திமுக கூட்டணி இடப்பகிர்வில் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், தகுதியானவர்களுக்குச் சீட் வழங்கப்படவில்லை என்றும் கூறி ஒரு தரப்பினர் விமான நிலையத்திலேயே ராகுல் காந்தியிடம் முறையிட்டனர். குறிப்பாக, நீண்டகாலமாகக் கட்சிப் பணியாற்றியவர்களுக்குப் பதிலாகப் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இத்தகைய உட்கட்சிப் பூசல்கள் தேர்தலின் போது கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.

நிதானமாகச் செயல்பட்ட ராகுல் காந்தி, அதிருப்தியில் இருந்த நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். பின்னர் அவர்களிடம் பேசிய அவர், "தேர்தல் நேரத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்புதான். ஆனால், நமது இலக்கு என்பது புதுச்சேரியின் உரிமைகளைப் பறிக்கும் சக்திகளை வீழ்த்துவதே ஆகும். தற்போதைய சூழலில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். உங்களது நியாயமான கோரிக்கைகள் தேர்தல் முடிந்த பிறகு நிச்சயம் பரிசீலிக்கப்படும்" என்று உறுதி அளித்தார். மேலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு, கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காகப் பாடுபடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.