சென்னையின் இதயமாகவும், கலை, கலாச்சாரம் மற்றும் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த தொகுதியாகவும் விளங்குவது எழும்பூர் (தனி) சட்டமன்றத் தொகுதி. நடுத்தர மக்களும், தொழிலாளர்களும் அதிகம் வசிக்கும் இந்தத் தொகுதி, ஆசியாவிலேயே பழமையான அருங்காட்சியகம் மற்றும் தென்னகத்தின் நுழைவு வாயிலான எழும்பூர் ரயில் நிலையம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களைக் கொண்டுள்ளது. 1957-ஆம் ஆண்டு உருவான இந்தத் தொகுதியில் இதுவரை 15 சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் திமுக 11 முறை வெற்றி பெற்று இத்தொகுதியைத் தனது அசைக்க முடியாத கோட்டையாக வைத்துள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் யார் தெரியுமா?.. அப்போ விஜய் இல்லையா?
காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. தேமுதிக 1 முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர் 1 முறை வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக, 2021ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் பாண்டியனை விட 38,768 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு முனைப் போட்டியில் இளம் வேட்பாளர்கள்:இந்தளவுக்கு சென்னையின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான எழும்பூர் (தனி) தொகுதி, இந்த முறை தமிழகத்தின் நான்கு முக்கிய அரசியல் கட்சிகளும் இளம் மற்றும் புதிய முகங்களைக் களமிறக்கியுள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு கட்சிகளுமே ‘முதன்முறை’ வேட்பாளர்களை முன்னிறுத்தி ஒரு புதிய தலைமுறை அரசியலுக்கு வழிவகுத்துள்ளன.
தமிழன் பிரசன்னா (திமுக):வக்கீல் மற்றும் சிறந்த பேச்சாளரான இவர், தொலைக்காட்சிகளில் கட்சியின் சார்பில் வாதிடும் பிரபலமான முகமாவார். “எழும்பூர் எப்போதும் திமுக-வின் கோட்டை; முதல்வர் ஸ்டாலின் தலைமையில் எழும்பூரைத் தரம் உயர்த்துவேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
அபிஷேக் ரங்கசாமி (அதிமுக):சட்டப் பட்டதாரியான இவர் ஒரு தொழில்முனைவோரும் கூட. 18 ஆண்டுகளாகக் கட்சியில் இருக்கும் இவர், “சென்னை திமுகவின் கோட்டை என்பது ஒரு மாயை; எழும்பூரில் நிலவும் வெள்ளப் பாதிப்பு மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே எனது நோக்கம்” என்கிறார்.
ராஜ்மோகன் (தவெக):முன்னாள் யூடியூபர் (தமிழ் வணக்கம்) மற்றும் சிறந்த தொகுப்பாளரான இவரை நடிகர் விஜய் தலைமையிலான கட்சி களமிறக்கியுள்ளது. “எழும்பூரில் அடிப்படை வசதிகள் கூட இல்லை; தவெகவின் இளைய சக்தியைக் கண்டு மற்ற கட்சிகள் பயப்படுகின்றன” என்று இவர் விமர்சிக்கிறார்.
சரண்யா (நாதக):ஐடி துறையில் பணியாற்றும் இவர், இரண்டு குழந்தைகளின் தாய். “எழும்பூரிலேயே பிறந்து வளர்ந்த ஒரே வேட்பாளர் நான் தான்; அதனால் இங்குள்ள மக்களின் பிரச்சனைகளை என்னால் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்” என்று உள்ளூர் அடையாளத்துடன் வாக்கு கேட்கிறார்.
மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகள்எழும்பூர் மையப்பகுதியாக இருந்தாலும், 70 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழும் மக்கள் பல அடிப்படைப் பிரச்சனைகளை முன்வைக்கின்றனர். கனமழை பெய்தால் வீடுகளுக்குள் நீர் புகுவது ஒரு தீராத பிரச்சனையாக உள்ளது. முறையற்ற சாலை விதிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து முடங்குகிறது. குறிப்பாகப் புரசைவாக்கம் பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளால் ஏற்படும் இடஞ்சல்கள். அடுக்குமாடி குடியிருப்புகளின் பராமரிப்பு மற்றும் பட்டா தொடர்பான சிக்கல்கள் உள்ளதாக கூறுகின்றனர்.
இதையும் படிக்க: “காற்றில் கூட ஊழல் செய்கின்ற ஒரே கட்சி”.. திமுக மீண்டும் தொடர வேண்டுமா? இபிஎஸ் சரமாரி தாக்கு!!
வெற்றி வாய்ப்பு யாருக்கு?திமுக தனது கோட்டையைத் தக்கவைக்கத் துடிக்கிறது. தற்போதைய எம்.எல்.ஏ பரந்தாமனுக்குப் பதிலாக தமிழன் பிரசன்னாவைக் களமிறக்கி புதுமையை நாடியுள்ளது. அதேசமயம், அதிமுக ஆளும் கட்சி மீதான அதிருப்தியை அறுவடை செய்ய நினைக்கிறது. தமிழக வெற்றிக் கழகமும், நாம் தமிழர் கட்சியும் இளைஞர்களின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் வெற்றியை ஈட்டத் திட்டமிட்டுள்ளன.