பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலனால், 100 அடி உயர உயர்மின் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறி இளம்பெண் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைஷாலி மாவட்டம் மஹ்னார் பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், ஒரு வாலிபரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த வாலிபர் அவரைத் திருமணம் செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், சுமார் 1.32 லட்சம் வோல்ட் மின்சாரம் பாயும் உயர்மின் கோபுரத்தின் உச்சிக்குத் தனது மொபைல் போனுடன் ஏறினார். அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
இளம்பெண் கோபுரத்தில் ஏறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விபரீதம் ஏதும் நடப்பதைத் தவிர்க்க, மின்சார வாரியத்தைத் தொடர்பு கொண்டு அந்தப் பகுதிக்கான மின் விநியோகம் உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்தது.
View this post on Instagram
A post shared by NDTV India (@ndtvindia)
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ஒலிபெருக்கி மூலம் இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு கட்டத்தில் ஒரு காவல்துறை அதிகாரி, “மகளே, என் வேலையைப் பறிக்க நினைக்காதே! நீ கீழே இறங்கி வா, இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். மற்றொரு அதிகாரி அந்தப் பெண்ணின் மொபைல் போனுக்கே அழைத்து சமாதானம் பேசினார்.
நேரம் செல்லச் செல்ல நிலைமை மோசமானதால், நான்கு காவல் நிலையங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். இரவு நேரம் நெருங்கியதால் மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டன. இறுதியாக, அந்தப் பெண்ணின் காதலனைப் போலீஸார் தேடிப் பிடித்துச் சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். காதலனை நேரில் பார்த்த பின்னரே அந்தப் பெண் சமாதானமடைந்து, பாதுகாப்புடன் கீழே இறங்கி வந்தார்.
பெண் கீழே இறங்கியதும் 9 மணி நேரப் பதற்றம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இருப்பினும், அந்தப் பெண் கேட்டபடி உடனடியாகத் திருமணம் நடைபெறவில்லை. இது குறித்து இரு குடும்பத்தாரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்காகத் தனது உயிரையே துச்சமெனக் கருதி இளம்பெண் உயர்மின் கோபுரத்தில் ஏறிய சம்பவம் பீகாரில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.