திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உருக்கமாகப் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டின் உள்ளேயும், மக்களின் மனங்களுக்குள்ளும் நுழைவதற்கு நான் பட்ட பாடு எனக்கு மட்டுமே தெரியும்; அதனால்தான் நான் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்ற பிறகு கட்சியையே ஆரம்பித்திருக்கிறேன்” எனத் தனது அரசியல் பயணத்தின் ஆழத்தைக் குறிப்பிட்டார்.
திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தன் மீது பல அவதூறுகளைச் சுமத்தியதாகவும், தனது படங்களை முடக்கி, எஸ்சிஓபி (SOP) போன்ற புதிய விதிகள் மூலம் தன்னை முடக்க முயன்றதாகவும் சாடிய அவர், “எத்தனை சோதனைகள் கொடுத்தாலும் மக்களை என்னிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது” என உறுதிபடத் தெரிவித்தார்.
குறிப்பாக, 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் ‘விஜய்’களே என்றும், அவர்கள் டாட்டாவோ, பிர்லாவோ அல்லது அம்பானியோ கிடையாது, உங்கள் வீட்டுப் பிள்ளைகள் தான் என்றும் குறிப்பிட்ட அவர், இந்தத் தேர்தல் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயத் தேர்தல் என்றும், காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் நற்பெயரைக் காக்கும் வகையில் முத்துராமலிங்க தேவர், வ.உ.சி போன்ற மண்ணின் மைந்தர்களின் வழியில் த.வெ.க உழைக்கும் என்றும் சூளுரைத்தார்.