ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி, சிறிய தகராறால் சோக சம்பவமாக மாறியது. இரண்டு அணிகள் மோதிய இந்த போட்டியில், ஒரு ரன் தொடர்பான சர்ச்சை காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நடுவராக இருந்த சிரஞ்சீவி தலையிட்டு சூழ்நிலையை சமாதானப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அதே நாள் மாலை, அந்த விவகாரம் மீண்டும் சில இளைஞர்களிடையே பேசப்பட்டபோது, வாக்குவாதம் திடீரென தீவிர தகராறாக மாறியது. அதில், கே. கிஷோர் (26) என்ற இளைஞர், போட்டி நடுவரின் சகோதரரான அஜித் (23) மீது கடுமையாக தாக்குதல் நடத்தி, அவரது நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார்.
மேலும் கடுமையாக காயமடைந்த அஜித் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒரு சாதாரண விளையாட்டு சர்ச்சை இளைஞரின் உயிரைப் பறித்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவலர்கள், குற்றச்சாட்டுக்குட்பட்ட கிஷோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.